வெற்றிமாறன் முடிவால் சலசலப்பு.. வித்தியாசமான படத்தை.. விரும்பியது போல எடுப்பது கனவுதானா?

Su.tha Arivalagan
Sep 02, 2025,06:11 PM IST

சென்னை: வெற்றிமாறன் இனி திரைப்பட தயாரிப்பாளராக இருக்க மாட்டார். அவர் தயாரிப்பு நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளார்.  அவரது முடிவு பெரும் விவாத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு படைப்பாளி தான் விரும்பிய கதையை படம் எடுப்பது கனவுதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தேசிய விருது பெற்ற ஆடுகளம், அசுரன் போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அவர் திரைப்பட தயாரிப்பில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆனால் தயாரிப்பாளராக தனது பங்கிற்கு குட் பை சொல்ல இருக்கிறார். வர்ஷா பரத் நடிக்கும் "பேட் கேர்ள்" திரைப்படம் தான் அவர் தயாரிக்கும் கடைசி படம். சென்சார் போர்டு பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது தயாரிப்பில் உருவான கோபி நயினார் இயக்கிய " மனுஷி " திரைப்படமும் பிரச்சனையில் சிக்கியது. இதனால் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.


வெற்றிமாறன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசுகையில்,"ஒரு தயாரிப்பாளராக, படத்தின் டீசர், டிரெய்லர் பற்றி வரும் ஒவ்வொரு கருத்தையும் கவனமாக கவனிக்க வேண்டும். ஏனென்றால், இவை படத்தின் வருவாயை பாதிக்கும். இது தயாரிப்பாளருக்கு கூடுதல் அழுத்தம். ஏற்கனவே மனுஷி திரைப்படம் நீதிமன்றத்தில் உள்ளது. பேட் கேர்ள் படத்திற்கும் U/A 16+ சான்றிதழ் பெற ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல வேண்டியிருந்தது. என்னைப் போன்றவர்கள் தயாரிப்பாளராக இருப்பது பெரிய சவாலாக இருக்கிறது. அதனால் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மூலம் தயாரிக்கும் கடைசி படம் "பேட் கேர்ள்" தான் என்று அவர் கூறியுள்ளார்.




வர்ஷா பரத் "பேட் கேர்ள்" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தை வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளனர். படம் ஏற்கனவே ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதை வென்றது. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன், சாந்தி பிரியா, சஷாங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோரும் நடிக்கின்றனர். படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே நாளில் சிவகார்த்திகேயனின் "மதராசி" மற்றும் கேபிஒய் பாலாவின் "காந்தி கண்ணாடி" ஆகிய படங்களும் வெளியாகின்றன.


தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் படைப்பாளிகளின் சுதந்திரம் என்பது குறிப்பிட்ட வரையறைக்குள்தான் இருக்க முடிகிறது. அதைத் தாண்டி அவர்கள் போக முடியவில்லை. போக நினைத்தால் சென்சார் ரூபத்தில் ஏதாவது முட்டுக்கட்டை வருகிறது. பல கலைஞர்கள், படைப்பாளிகள் இதற்காகத்தான் சொந்தமாக படம் தயாரிக்கின்றனர். அப்போதுதான் சுதந்திரமாக தங்களது கருத்துக்களைச் சொல்ல முடியும் என்பதால். ஆனால் அதற்கும் தற்போது ஆபத்து வந்திருப்பதாகவே தெரிகிறது.