விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

Su.tha Arivalagan
Apr 27, 2025,11:15 AM IST
சென்னை: தேமுதிக பொதுக்குழு மற்றும் தலைமை செயற்குழுக் கூட்டம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் ஏப்ரல் 30ம் தேதி நடைபெறவுள்ளது.

விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதால் பல முக்கிய முடிவுகளும் இதில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தேமுதிகவின் முக்கியப் பொறுப்பில் விஜய பிரபாகரனை நியமிக்க கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீர்மானித்திருப்பதாக ஒரு செய்தி உள்ளது. அதுதொடர்பாக இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்பட வுாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.



தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 30.04.2025 புதன்கிழமை காலை 9  மணியளவில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, K.V.மஹாலில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், கழக வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார் என்று தேமுதிக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக அவைத்தலைவர், மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் (ஒரு நபர் மட்டும்), மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேமுதிக தற்போது எந்தக் கூட்டணியில் இருக்கிறது என்பதில் தெளிவு இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. தற்போது பிரிந்து கிடந்த அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் தேமுதிகவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் அதிமுக - பாஜக கூட்டணியில்தான் தேமுதிகவும் இடம்பெறும் என்று தெரிகிறது. ஒரு வேளை அங்கு தேமுதிகவுக்கு உரிய மரியாதை கிடைக்காத பட்சத்தில் திமுக பக்கம் தேமுதிக வர வாய்ப்புள்ளது. அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் வாய்ப்புள்ளது.

கூட்டணி குறித்தும் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியினரின் கருத்தை பிரேமலதா விஜயகாந்த் கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.