தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

Meenakshi
Jun 09, 2025,12:39 PM IST

கரூர்: விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும். 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டி காட்ட முடியும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், 2026ல் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதிதான் முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.




திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிகளுக்கும் 2 நாட்களில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்கை அதிகமாக நடக்கிறது. தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை முதலில் சரி செய்ய வேண்டும்.


விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம் தான் போய் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது தான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டி காட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.