விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

Meenakshi
Jun 11, 2025,07:51 PM IST

சென்னை: விஜய் எங்க வீட்டுப் பிள்ளை தான். அரசியல் கூட்டணி நிலைப்பாடு குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் கூட்டணி, தொகுதி பங்கீடு  குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த இன்று ஆலோனை நடத்தினார். தேமுதிக கட்சி ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,




சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியா என்பது பற்றி இப்போது பதில் கூற முடியாது. அந்தக் கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும். ஆனால், தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக தயங்காது. கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தேமுதிக மாநாடு நடைபெறும். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு தொடர்பாக அதிமுக ஏற்கனவே அறிவித்ததில் ஆண்டு குறிப்பிடவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டபோது ஆண்டு குறிப்பிடுவது வழக்கத்தில் இல்லை என்று கூறினார். எழுத்துப்பூர்வமாக தருவதை விட எனது வார்த்தைகள் தான் முக்கியம் என்று அவர் உறுதியும் கொடுத்தார்.


தற்போது தேமுதிகவுக்கு 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட்டு கொடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பொறுத்தார் பூமி ஆள்வார். நிச்சயமா அதற்கான காலம் வரும் என்றார். விஜய் எங்க வீட்டுப் பிள்ளை தான். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே அவர் எங்கள்  வீட்டுப்பிள்ளை தான். அரசியல் கூட்டணி நிலைப்பாடு குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். கூட்டணி இல்லாமல் தனியாக களத்தில் நிற்கவும் தேமுதிக தயங்காது. எங்களுடைய நிலைப்பாடு குறித்து சரியான நேரத்தில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.