தேமுதிக யாருடன் கூட்டணி? இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், தேமுதிக யார் பக்கம் செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடலூரில் இன்று நடைபெறும் தேமுதிக உரிமை மீட்பு மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்த முடிவை தேமுதிக பொதுச் செயலாளர் அறிவிப்பார் என ஏற்கனவே சொல்லப்பட்டது.
இது குறித்து தேமுதிகவின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்த இறுதி முடிவை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜனவரி 9, 2026) இரவு 7 மணி அளவில் அறிவிப்பார்" என்று தெரிவித்துள்ளார். "10 ஆண்டுகளுக்கு பிறகு மிகப் பிரம்மாண்ட மாநாட்டை நடத்துகிறோம். தேமுதிக இடம்பெறும் கூட்டணி, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்" என்று அவர் மிகுந்த நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தேமுதிக ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று இரவு அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் மறைவிற்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் மிக முக்கியமான தேர்தல் இதுவாகும். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சி எடுக்கும் இந்த முதல் பெரிய அரசியல் முடிவு, தமிழகத்தின் தேர்தல் முடிவுகளில் ஒரு திருப்பு முனையாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தனித்துப் போட்டியா அல்லது திராவிடக் கட்சிகளுடனா அல்லது தேசியக் கட்சிகளுடனா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்று இரவு 7 மணிக்கு விடை கிடைத்துவிடும். இதனால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.