இதில் தான் திமுக-அதிமுக இடையே போட்டி...சீமான் சொன்ன புதிய தகவல்
திருச்சி: தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே போட்டி உள்ளது. ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தீய சக்திக்கு மாற்று எங்களைப்போல தூய ஆற்றல்கள் தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், பொங்கலுக்கு இலவச பரிசுப் பொருட்கள் தருவது கேவலமான ஒன்று. அதில் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. போராடக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது கொடுந்துயரம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் உள்ளிட்டவற்றில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே போட்டி உள்ளது. ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தீய சக்திக்கு மாற்று எங்களைப்போல தூய ஆற்றல்கள் தான்
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார். ஆனால், திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான். தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதுவோ தெரியாதவர்கள் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுட சொன்னவர் பெரியார். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம். திருமாவளவன் தேவைக்கேற்ப மாற்றி மாற்றி பேசுகிறார்.
போதை பொருள் குறித்து பேச தமிழக அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. போதைப் பொருளை தடுப்போம் என முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மக்களின் கோரிக்கைகளை கேட்டு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவோம் என கூறுவது மக்களுக்கு என்ன பிரச்னை என தெரியாமலே ஆட்சி செய்கிறீர்களா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. காங்கிரஸ் - பாஜக, திமுக -அதிமுகவிற்கு எந்த கோட்பாடு மாற்றமும் கிடையாது. திமுகவிற்கு மாற்று அதிமுக என கூறுவது வெறும் வார்த்தையில்தான், கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது.