கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

Meenakshi
Dec 17, 2025,05:09 PM IST
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க எம்பி கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக தற்போதுள்ள கூட்டணி கட்சிகளுடனேயே தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. இதற்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.



கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவானது, பொது மக்கள் நலன் அமைப்புகள் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்லுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் அமைக்கப்பட்ட குமுவினர் விவரம்,

தலைமை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் மற்ற உறுப்பினர்களாக, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி. செழியன், சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, அயலக அணிச் செயலாளர் எம்.எம். அப்துல்லா, செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ. தமிழரசி ரவிக்குமார், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஜி. சந்தானம் மற்றும் கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.