தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்தி.. அறிவுச் சூரியனாய் வந்துதித்த கலைஞர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jun 03, 2025,10:37 AM IST

சென்னை: தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்று மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மறைந்த தலைவர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்ரனர். அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் வருவதால் படு உற்சாகமாக இந்த பிறந்த நாளை எதிர்கொண்டுள்ளது திமுக. தேர்தல் பணிகளின் தொடக்கமாகவும் இந்த பிறந்த நாளை பயன்படுத்துகிறது திமுக.


மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்திலும் கருணாநிதிக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல கருணாநிதி பிறந்த நாளையொட்டி 102 கூட்டங்கள் நடத்தவும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.


இந்த நிலையில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் மெரீனா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். 




முன்னதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!


ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.


தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினர் பல்வேறு நிகழ்வுகளுடன் தடபுடலாக கொண்டாடி மகிழ்ந்தனர்.