மாநிலங்களவை தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. கமல்ஹாசனுக்கும் சீட் கிடைத்தது!
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் திமுக சீட் வழங்கியுள்ளது.
திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவார்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. அதேபோல், அதிமுக கூட்டணி சார்பில் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் என மொத்தம் ஆறு பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதனையடுத்து மாநிலங்களவை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 02 ஆம் தேதி தொடங்கும். தேர்தல் முடிவுகள் ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் தரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வில்சன் மீண்டும் எம்பி ஆகிறார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைவர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோரும் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.