"எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; தயாராக இருங்கள்" – மு.க.ஸ்டாலின் சொன்னதன் அர்த்தம்
சென்னை: "தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்பதால், திமுக தொண்டர்கள் இப்போதிருந்தே தேர்தல் பணிகளுக்கு நூறு சதவீதம் தயாராக இருக்க வேண்டும்," என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட மாற்றுக்கட்சி இணைப்புக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சரான பி.பெஞ்சமின் தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
பெரும்பான்மையற்ற அரசு :
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தற்போதைய ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டதை சுட்டிக்காட்டினார். "234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், தற்போதைய ஆளுங்கட்சி வெறும் 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்கள் அவர்களிடம் இல்லை. பிற கட்சிகளின் பலவீனமான ஆதரவை நம்பியே இந்த அரசு தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம்; இன்னும் மூன்று மாதங்களிலோ அல்லது ஆறு மாதங்களிலோ கூட தேர்தல் வர வாய்ப்புள்ளது," என்று அவர் எச்சரித்தார்.
கூட்டணியில் விரிசலா?:
திமுக தலைவரின் இந்த திடீர் தேர்தல் எச்சரிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை என்பதையும், எந்த நேரத்திலும் கூட்டணி உடையும் சூழல் நிலவுவதையுமே ஸ்டாலினின் இந்த பேச்சு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆட்சி கவிழ்ந்து முன்கூட்டியே தேர்தல் வந்தால், அதை எதிர்கொள்ள திமுக இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டது என்பதை இக்கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
திமுகவில் தொடரும் இணைப்புகள்:
முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், மதிமுகவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் பி. பெஞ்சமின் மற்றும் புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், "திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் இந்தச் சூழலில், பதவிகளை எதிர்பார்க்காமல் கட்சியின் கொள்கைக்காக இணையும் உங்களின் முடிவு பாராட்டுக்குரியது. இது தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பம்," என்றார்.
மு.க.ஸ்டாலின் சொல்வது சாத்தியமா?
ஆளும் தவெக அரசுக்கு திமுக கூட்டணியில் இருந்த பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையில் இடமும் பிடித்து விட்டன. இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது போன்ற கருத்துக்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் அவர்கள் ஆதரவை வாபஸ் வாங்கும் நிலை தான் உள்ளது. ஒரு வேளை நடக்க இருக்கும் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக அனைத்திலும் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை பலத்தை எட்டுவது கடினம் தான். அதனால் தற்போதைய சூழலில் மூண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால் அது தவெக.,விற்கு எதிராக அமையலாம் என்ற நிலை இருப்பதை கணித்து தான் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களிடம் இப்படி பேசி உள்ளார் என சொல்லப்படுகிறது.