"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

Su.tha Arivalagan
Jul 04, 2026,12:43 PM IST

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு வார கால தனிப்பட்ட பயணமாக இன்று லண்டன் புறப்பட்டார். பயணத்திற்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.


லண்டன் புறப்படும் முன்பாக தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் உணர்வுப்பூர்வமான செய்தி ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், "இரண்டு வார அயலகப் பயணமாக இன்று நான் புறப்படுகிறேன். உடல் அளவில் நான் அயலகத்தில் (வெளிநாட்டில்) இருந்தாலும், என் மனம் எப்போதும் அண்ணா அறிவாலயத்தில் தான் இருக்கும்"  என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் மீதும், அதன் அன்றாடப் பணிகள் மீதும் தமக்குள்ள பிணைப்பை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


வெளிநாடு செல்லும் நிலையிலும் கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் திமுக தலைவர் உறுதியாக உள்ளார். குறிப்பாக, திமுகவை அடிமட்டம் முதல் உச்சக்கட்டம் வரை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.

கழகத்தின் கிளைக் கழக அமைப்புகள் முதல் தலைமைப் பொறுப்புகள் வரை அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு, இதற்கென அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவிற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.



பொறுப்புகளை ஒப்படைத்த பின் பயணம்


கட்சியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தேர்தல் வியூகங்களுக்கு அடிப்படையாக அமையவிருக்கும் இந்த மறுசீரமைப்புப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்கான முழுப் பொறுப்புகளையும் உரிய குழுவிடம் அவர் முறையாக ஒப்படைத்துள்ளார். இந்த முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் திட்டமிட்டு ஒப்படைத்த பிறகே, இன்று தமது அயலகப் பயணத்தை மேற்கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.


தமிழகத்தில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்து வரும் வேளையில், திமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தலைவர் இல்லாத நிலையிலும் கழகப் பணிகள் தொய்வின்றி நடப்பதற்கான இந்த முறையான ஏற்பாடு, திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.