CM MK Stalin campaign: திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்க உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முறையும் கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிட உள்ளார். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கொளத்தூர் தொகுதியில் அவர் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிட உள்ளார். இதற்காக அவர், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் முதல் நாளான நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் முடிந்ததும் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து, பிரச்சார வியூகங்கள் குறித்து முக்கிய ஆலோசனையை அவர் நடத்தினார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து இன்று ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை துவக்க உள்ளார். எப்போதுமே தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவங்குவது திமுக தலைவர்களின் சென்டிமென்ட் வழக்கமாக இருந்து வருகிறது. கருணாநிதி இருந்த வரை அவர் எப்போதுமே திருவாரூரில் பிரச்சாரத்தை துவக்குவதை தான் வழக்கமாக வைத்திருந்தார்.
அவருக்கு பிறகு தற்போது முதல்வர் ஸ்டானும் அதே சென்டிமென்டை பின்பற்றி வருகிறார். திருவாரூரில் துவங்கி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். திருவாரூர் ரத வீதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இன்று துவங்கி, ஏப்ரல் 21ம் தேதி வரை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவு நாளான ஏப்ரல் 21ம் தேதி அவர் தனது பிரச்சார பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக திமுக சார்பில ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.