முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு, அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக பல்வேறு கட்சிகளும் போட்டா போட்டி கொண்டு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அதிமுக மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. அதேபோல் தவெகாவும், நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண்கின்றன. தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பது குறித்த தகவல் முறையாக வெளியாகவில்லை.
ஆனால் தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளர் மற்றும் பொருளாளரை நியமித்துள்ளது கட்சி தலைமை.இதனால் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுகள் பிரிய கூடும் என்பதால் திமுகவின் வாக்கு எண்ணிக்கையில் கணிசமாக குறையக்கூடும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவும் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் முதல்வருடன் துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள், 76 மாவட்டச் செயலாளர்கள், முக்கிய திமுக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் மதுரையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.