பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!

Meenakshi
Aug 19, 2025,04:19 PM IST
டெல்லி: தமிழ்நாட்டையும், தமிழர்களையும் மதிக்காத பாஜக, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளர் ஆக்கிவிட்டதாலேயே ஆதரிக்க முடியுமா என்று திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக  சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.  அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த பதவிக்காக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது,
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி பேசுகையில், இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்க்கும் வகையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரான பி. சுதர்ஷன் ரெட்டியை முன்மொழிந்துள்ளோம். நாங்கள் தேர்வு செய்த வேட்பாளர் அரசமைப்புச் சட்டத்தை மதிப்பவர். 

பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளதாகக் கருதிவிட முடியாது. சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டையில் அரசியலமைப்பை மதிப்பவரையே திமுகவும் ஆதரிக்கும். பாஜகவினர் பிரிவினைவாத அரசியலை செய்கிறார்கள் அதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.