மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

Su.tha Arivalagan
Feb 09, 2026,05:39 PM IST

டில்லி : நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவரங்களை ஊடக நேர்காணலில் பகிர்ந்ததற்காக, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளதாக திமுக எம்.பி திருச்சி சிவா இன்று தெரிவித்தார்.


மாநிலங்களவை காலை 11 மணிக்குத் தொடங்கியவுடன், திருச்சி சிவா இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: "அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக நான் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளேன். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அமர்வில் இருக்கும் போது, அரசின் கொள்கை முடிவு குறித்து அவைக்கு வெளியே அவர் பேட்டியளித்துள்ளார். இது அவையின் மாண்பை மீறும் செயலாகும்," என்றார். திருச்சி சிவாவின் இந்த கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் ஆதரித்தார்.




இதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "அமைச்சர் ஏற்கனவே இது குறித்து அவையில் அறிக்கை அளித்துள்ளார். இருப்பினும், இது தொடர்பாக நான் ஆய்வு செய்கிறேன்," என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது, பின்னர் அவைத்தலைவர் 'பூஜ்ய நேர' (Zero Hour) நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.


முன்னதாக நேற்று பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் நலன்களையும், உள்நாட்டுத் தொழில்துறையையும் பாதுகாப்பதற்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தார். இந்த ஒப்பந்தம் இறுதியில் இந்திய விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.