DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது வெளியிட்ட கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
எதிர்க்கட்சியினரின் பல்வேறு விமர்சனங்களுக்கும், அரசியல் நகர்வுகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அவரது இந்த அறிக்கை அமைந்துள்ளது.
தேர்தலை சந்தித்துதான் ஆட்சிக்கு வருவோம்!
செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, திமுகவின் அரசியல் கொள்கை மற்றும் தார்மீகப் பொறுப்புகள் குறித்து மிகத் தெளிவாக விளக்கினார். "நாங்கள் நிச்சயமாக தற்போதைய ஆட்சியை எவ்வித குறுக்கு வழியிலும் கவிழ்க்க மாட்டோம்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பேசுகையில், "தேர்தலை நேருக்கு நேராகச் சந்தித்து, மக்களின் பேராதரவைப் பெற்றுத்தான் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்களைச் சந்திக்காமல், அவர்களின் தீர்ப்பைப் பெறாமல் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரவே மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்."
கொல்லைப்புற அரசியலுக்கு இடமில்லை :
சமீபகாலமாக அரசியல் சூழலில் நிலவி வரும் பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர், "கொல்லைப்புற வழியாக (Backdoor entry) எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் துளியும் கிடையாது" என்று மிகவும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக எப்போதும் ஜனநாயகத்தின் மீதும், மக்களின் வாக்குரிமையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட ஒரு இயக்கம் என்பதை இந்த அறிக்கை மீண்டும் நிலைநிறுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆட்சியைப் பிடிப்பதை விட, மக்களின் நம்பிக்கையைப் பெற்று நேர்மையான முறையில் அதிகாரத்திற்கு வருவதே தங்களது இலக்கு என்பதை அவர் இந்த பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுக மீது தாக்கு :
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெக.,வில் சென்று இணைவது குறித்து பேசிய ரகுபதி, சி.விஜயபாஸ்கர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகளை இருந்து தப்பிக்க விஜய் என்ற வாஷிங்மெஷினில் போட்டு, விஜய் என்ற வாஷிங் பவுடரில் போட்டு துவைத்தால் சுத்தமாகி விடுவதாக அவர்கள் நம்புகிறார்கள். அதற்காக தான் தவெக.,விற்கு சென்று இணைகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மீதான புகார் :
குதிரை பேரம் நடத்தியதாக செந்தில் பாலாஜி சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் செய்யப்பட்டவையே தவிர அதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை. அப்படி குதிரை பேரம் நடத்தி ஆட்சிக்கு வருவதாக இருந்தால் 2017ம் ஆண்டு எங்களிடம் 109 எம்எல்ஏ.,க்கள் இருந்தனர். அப்போதே ஆட்சிக்கு வந்திருப்போம் என்றார்.