அதிமுக-திமுக கூட்டணி சேர முடிவு செய்ததா.. ஆணித்தரமாக மறுத்த ஆலந்தூர் பாரதி

Su.tha Arivalagan
May 12, 2026,02:14 PM IST

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு இழுபறி நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பரஸ்பரம் அரசியல் எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி சேர முயற்சித்ததாக சிவி சண்முகம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால் திமுக தரப்பில் ஆலந்தூர் பாரதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது முற்றிலும் வதந்தி என்று அவர் கூறியுள்ளார். 


பரவிய வதந்தி என்ன?


தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைத் தடுக்கவும், திராவிட அரசியலைத் தக்கவைக்கவும் திமுக மற்றும் அதிமுக கைகோர்க்கப் போவதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. 


குறிப்பாக, சில தலைவர்கள் இரு கட்சிகளுக்கும் இடையே சமரசம் பேச முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.




எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி திமுக ஆதரவு தரப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் கடைசியில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை தவெக அரசுக்கு ஆதரவு தர முன்வந்ததால் இந்த செய்தி அப்படியே அடங்கிப் போனது.


இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிவி. சண்முகம், எடப்பாடி பழனிச்சாமியே இந்தத் திட்டம் குறித்து தங்களிடம் தெரிவித்ததாகவும், தாங்கள் பேரதிர்ச்சி அடைந்ததாகவும் கூறி பரபரப்பைக் கூட்டினார்.


திமுகவின் அதிகாரப்பூர்வ விளக்கம் :


இந்த வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறுகையில், மக்களாட்சியின் மாண்பினைச் சிதைக்கும் வகையில் சில விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் பொய்ப் பிரசாரங்களை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. கொள்கை ரீதியாகவும், லட்சியப் பாதையிலும் நேர் எதிர் துருவங்களாக இயங்கும் திமுகவும் அதிமுகவும் இணைவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் கற்பனையானவை. 


மக்களின் தீர்ப்பை ஏற்று ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்பட திமுக தயாராக இருக்கிறது. இதை எங்களது தலைவர் அன்றே தெளிவாகச் சொல்லியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களின் பக்கம் நின்று ஜனநாயகத்தைக் காக்கும் என்றும், இத்தகைய அடிப்படையற்ற வதந்திகளை உடன்பிறப்புகளும் பொதுமக்களும் நம்ப வேண்டாம்.


அடைத்து வைக்கப்பட்டு வெளியே வந்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பிளவுக்கு எங்களைக் காரணமாக்க முயல்கிறார்கள். அதிமுகவின் பிளவுக்கு திமுகவை சாக்காக இழுக்கின்றனர். எம்.ஏ. பேபி பேட்டியில் சொன்னது வதந்து என்று அவரே சொல்லி விட்டார்.  பிறகும் இதையே சொல்லிக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.


யார் சொல்வது உண்மை?


அதிமுக-திமுக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ., சி.வி.சண்முகம் வெளிப்படையாக உண்மையை போட்டு உடைத்துள்ளார். ஆனால் திமுக அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 


இருவரில் யார் சொல்வது உண்மை? உண்மையில் திரை மறைவில் என்ன தான் நடந்தது? என அதிமுக, திமுக என இரு தரப்பு தொண்டர்களும் உச்சபட்ச குழப்பத்திலும், பதற்றத்திலும் இருந்து வருகின்றனர்.