கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
டில்லி: கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக டில்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகி உள்ளார்.
பின்னணி:
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையில் செந்தில் பாலாஜி:
இந்த வழக்கில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், ஆளுங்கட்சியின் தலையீடு இருந்ததாகவும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, தவெக தரப்பில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் உள்ளூர் திமுகவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே தவெக தலைவர் விஜய்யிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து மூன்று கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மார்ச் 15 விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. மார்ச் 17-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அந்தச் சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டெல்லி பயணம்:
சிபிஐ சம்மனை ஏற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். "கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், மார்ச் 17 அன்று நேரில் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்க உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து செந்தில் பாலாஜி டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியும் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் பரபரப்பு:
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த சிபிஐ விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்தச் சம்பவத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை மூலம் பல ரகசியங்கள் அம்பலமாகும் என்றும் கூறியுள்ளார்.
இன்று காலை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி உள்ள செந்தில் பாலாஜியிடம், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் போலீசார் தரப்பில் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, மேலிட உத்தரவின் பேரில் தான் எஃப்ஐஆர் போடப்பட்டதாக சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மேலிடம் யார் என்பது குறித்தும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.