உச்சநீதிமன்றத்தை நாடும் திமுக: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக அதிரடி முடிவு

Su.tha Arivalagan
Jul 03, 2026,11:57 AM IST

சென்னை: கரூர் சம்பவங்கள் மற்றும் காவல்துறைக்கு எதிராக சர்ச்சை கருத்துகளைப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பின்னணி என்ன?

நேற்று மாமல்லபுரத்தில் மாற்று கட்சிை சேர்ந்தவர்கள் தவெக.,வில் இணையும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் காவல்துறையை வைத்து தங்கள் மக்களைக் கொன்று குவித்ததாக திமுக மீது நேரடியாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ஆளுங்கட்சி அமைச்சரே அரசு நிர்வாகத்தின் மிக முக்கிய அங்கமான காவல்துறையைச் சாடிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, சிபிஐ (CBI) பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெயரும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அவரே நேரடியாகக் காவல்துறையைக் குற்றம்சாட்டிப் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.


திமுகவின் அதிரடி முடிவு:




அமைச்சரின் இந்தப் பேச்சு அரசுக்கும், காவல்துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கருதி, இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள திமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்ட திமுக தலைமை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளது. காவல்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சார்ந்த விவகாரங்களில் தன்னிச்சையான கருத்துகளைப் பரப்பும் வகையிலும் பேசிய அமைச்சருக்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:

சிபிஐ எஃப்.ஐ.ஆரில் பெயர் இடம்பெற்றிருக்கும் ஒரு அமைச்சர், பொதுவெளியில் அரசு இயந்திரத்திற்கு எதிராகப் பேசியதும், அதற்கு எதிராகத் தற்போதைய அரசியல் நகர்வுகள் உச்சநீதிமன்றம் வரை செல்வதும் தமிழகத்தில் அரசியல் விவாதங்களைச் சூடாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக திமுக தரப்பிலிருந்து எப்போது மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பின் விளக்கம் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே இதன் தீவிரத்தன்மை முழுமையாகத் தெரியவரும்.