ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

Su.tha Arivalagan
Sep 07, 2026,12:50 PM IST

சென்னை : தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கியதற்கு, பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி தர சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே செய்தியார்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் பற்றியும், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பற்றியும் மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.


“ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு; பதில்கள் இல்லை”


சட்டமன்றத்தில் தாங்கள் எழுப்பிய 15 கேள்விகளுக்கு முதலமைச்சர் எந்தவித நேரடி பதிலையும் அளிக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். “எங்களது கேள்விகளுக்குத் திங்கள்கிழமை பதில் சொல்வேன் என்று கூறிச் சென்றவர் தயாராக வருவார் என நினைத்தேன். ஆனால், மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்புவித்தல் போட்டிபோல் சட்டமன்றத்தில் பேசிவிட்டுச் சென்றுள்ளார். டைவர்ஷன் இல்லாமல் நேரடியாகப் பேசாமல், அதே ஆக்டிங், பஞ்ச் டயலாக் பேச்சு என ரீல்ஸ்க்காக (Reels) மட்டுமே முதல்வர் பேசியுள்ளார்” என்று சாடினார்.


சுரங்கக் கட்டுப்பாடு குறித்து குற்றச்சாட்டு :




மேலும், அரசு நடத்தும் சுரங்கங்களின் பின்னணியில் முதலமைச்சரின் நெருங்கிய நபர்கள் இருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், “விஜய்யின் நண்பர், ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, அவருடைய பிஸ்னஸ் பார்ட்னர் அனில் ரெட்டி ஆகியோர் சேர்ந்துதான் அரசு நடத்தும் சுரங்கங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்” எனத் தெரிவித்தார்.


தகுதி குறித்துக் கடும் விமர்சனம் :


மிசா (MISA) சட்டப் போராட்டம் குறித்து முதலமைச்சர் பேசியதற்குப் பதிலளித்த அவர், “கொடநாட்டில் தனது பட ரிலீஸ்க்காக வாட்ச்மேன் (Watchman) வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். இவருக்கு மிசாவைப் பற்றி, எங்கள் தலைவரைப் பற்றிப் பேச 1% கூட தகுதி இல்லை. இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து” என்றும் காரசாரமாகப் விமர்சித்தார். அமலாக்கத்துறை சொல்லுவதாக சொல்லுவது எல்லாம் வெறும் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே. எதுவும் நிரூபிக்கப்படவில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார்.


சபாநாயகர் செயல்பாடு மீது குற்றச்சாட்டு : 


சட்டமன்றச் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “முதலமைச்சர் பேசி முடித்தவுடன் நாங்கள் பேசுவதற்கு அனுமதி கேட்டோம். முதலில் அனுமதி தரப்படும் என்று ஒப்புக்கொண்ட சபாநாயகர், யாரோ கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்த பிறகு, யாருடைய அழுத்தத்தினாலோ பேச அனுமதி மறுத்துவிட்டார். தமிழக அரசுக்கும் முதலமைச்சரின் பேச்சுக்கும் பேரவைத் தலைவர் முழுக்க முழுக்க ஜால்ரா அடித்துள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.


முன்னதாக, சட்டமன்றத்தில் ஆவேசமாகப் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக குறித்தும், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு விபரங்கள் குறித்து பட்டியலிட்டு, திமுக.,வினர் ஆவேசமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.