தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
சென்னை: இன்று மாலை தஞ்சையில் திமுகவின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு மிக பிரம்மாண்ட அளவில் நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திமுக தனது தேர்தல் களப்பணிகளை மிகத்தீவிரமாகத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு முக்கியப் பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்காக செங்கிப்பட்டியில் (திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை), சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு இன்று மாலை 4.00 மணி அளவில் தொடங்குகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 46 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து சுமார் 1.5 லட்சம் பெண்கள் கருப்பு - சிவப்பு சீருடையில் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டிற்கு வரும் பெண்களின் வசதிக்காக 400-க்கும் மேற்பட்ட மொபைல் கழிவறைகள், தாய்மார்களுக்குப் பாலூட்டும் அறைகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இலவச நாப்கின் வழங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி இன்று நள்ளிரவு வரை தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.