தமிழ்நாட்டில் இன்று எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா? இதோ முழு விபரம்!

Meenakshi
May 19, 2025,07:10 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மதியம் வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை  தற்போது முன்கூட்டியே துவங்கியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு கடல் அரபிக் கடலில் வருகிற 21ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்றி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22ம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பின்னர் இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.




 இதனால், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி,  திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.