முற்றி வரும் எலான் மஸ்க் - டிரம்ப் மோதல்.. நீடிக்கும் பரபரப்பு.. அடுத்தது என்ன?

Su.tha Arivalagan
Jun 07, 2025,05:32 PM IST

வாஷிங்டன்: எலான் மஸ்க் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான மோதல் நாளுக்கு நாள் முற்றி வருவதால் இது என்னாகுமோ என்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பில்லியனர் எலான் மஸ்க் இடையே நிலவி வரும் மோதல் உலகறிய வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். டிரம்ப், மஸ்க்குடன் பேச எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். 


சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் வேலைகளில் மும்முரமாக இருப்பதால் மஸ்க்குடன் பேச நேரமில்லை என்றும், அவர் நலமாக இருக்க வாழ்த்துவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். மஸ்க் ஒரு புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.




மஸ்க் தொடர்பாக டிரம்ப்பிடம், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறுகையில், சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற பல வேலைகளில் நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன்... நான் அவர் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்.  அவருக்கு புத்தி பேதலித்து விட்டது. அவருடன் பேசும் எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை. நான் அதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை என்றார் டிரம்ப்.


முன்னதாக, அமெரிக்காவிற்கு இன்னொரு கட்சி தேவையா என்று எலான் மஸ்க் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார். அதில் 80% பேர் தேவை'என்று பதிலளித்தனர். இந்த முடிவுகளை மேற்கோள் காட்டி மஸ்க், "தி அமெரிக்கா பார்ட்டி" என்று குறிப்பிட்டு இருந்தார். "80% நடுநிலையாளர்களை" பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய கட்சியை அவர் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.


டிரம்ப் மற்றும் மஸ்க் இருவரும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், டிரம்ப் முன்மொழிந்த 'ஒரே பெரிய அழகான மசோதா'வை மஸ்க் எதிர்த்தார். அது "வெறுக்கத்தக்கது" என்றும், கூட்டாட்சி பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடியாக, மின்சார வாகனங்களுக்கான மானியங்களை குறைக்க டிரம்ப் முன்மொழிந்ததால் மஸ்க் தனக்கு எதிராக  டிரம்ப் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.