ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்... பிரதமர் மோடியுடனான சந்திப்பு ரத்து
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மாலை கனடாவின் Calgary நகரில் நடந்த G-7 உச்சி மாநாட்டை பாதியில் முடித்துவிட்டு, இஸ்ரேல் - ஈரான் மோதல் பிரச்சினை காரணமாக அவசரமாக வெளியேறினார். இதனால், பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் திட்டமிட்டிருந்த இரு தரப்பு சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
டிரம்ப் உச்சி மாநாட்டிற்கு வந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேறினார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், "நிறைய விஷயங்கள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய கிழக்கில் நடக்கும் சம்பவங்கள் காரணமாக, அதிபர் டிரம்ப் இரவு தலைவர்களுடன் இரவு உணவு சாப்பிட்ட பிறகு புறப்பட்டுள்ளார்" என்று கூறினார். இத குறித்து டிரம்ப் ஒரு ட்வீட்டில், "மக்கள் அனைவரும் உடனடியாக டெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும்" என்று கூறியது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், "நான் அவர்களிடம் கையெழுத்திட சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிர்கள் வீணாகப் போயுள்ளன. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்று நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்!" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இப்படிச் சொல்லியிருப்பதன் மூலம் மிகப் பெரிய அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து திட்டமிடுகின்றனவா என்ற அச்சமும் எழுந்துள்ளது. அப்படி ஏதாவது விபரீதமாத நடந்தால் அது உலகப் போருக்கு வித்திடக் கூடிய அபாயமும் உள்ளது. ஏற்கனவே, ஈரான் மதத் தலைவர் கமேனியை கொன்றால்தான் தீர்வு கிடைக்கும் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. அப்படி நடந்தால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளை இஸ்ரேல் மிகக் கடுமையாக பகைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. பலமுனைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆளாகக் கூடிய அபாயமும் உள்ளது.
டிரம்ப் வாஷிங்டன் வந்ததும், அவசர தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும், ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஒரே தாக்குதலில் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானம் மூலம் பதுங்கு குழி தகர்க்கும் வெடிகுண்டை பயன்படுத்தலாம் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.
ஈரான் நிர்மானித்து வைத்துள்ள அனு உலைகளை முழுமையாக அழிக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. அதைச் செய்யும் சக்தி இஸ்ரேலிடம் இல்லை. ஆனால் அமெரிக்காவிடம் உள்ளது. GBU-57 என்று அழைக்கப்படும் Massive Ordnance Penetrator, 20 அடி நீளம் கொண்டது. இந்த பதுங்கு குழியைத் தகர்க்கும் வெடிகுண்டு 13600 கிலோ எடை கொண்டது. இதை B-2 குண்டுவீச்சு விமானத்தால் மட்டுமே தூக்கிச் செல்ல முடியும். ஈரானின் Fordo அணு உலைகளை அழிக்க அமெரிக்கா பல GBU-57 வெடிகுண்டுகளை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவே சிறந்த வழி என்று இஸ்ரேல் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
இதற்கிடையே டிரம்ப் தேவையில்லாத போரில் ஈடுபடுகிறார் என்று அமெரிக்காவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தனது "அமெரிக்கா முதலில்" என்ற வாக்குறுதியை மீறி, அமெரிக்காவிற்கு தேவையில்லாத போரில் ஈடுபடுத்துகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்கா ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளது. மற்றொரு போரில் ஈடுபட்டால் மேலும் பலவீனமடையும் என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அது மத்திய கிழக்கில் ஒரு பெரிய போருக்கு வழிவகுக்கும். மேலும், BRICS மற்றும் NATO போன்ற உலகளாவிய அமைப்புகளையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.