அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
சென்னை: பாமக, டாக்டர் அன்புமணி ராமதாஸின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பது போலத் தெரிகிறது. 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மாவட்டச் செயலாளர்களில் 22 பேர் இன்று அன்புமணி கூட்டிய கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். ஒருவர் மட்டும் வரவில்லை. அவரும் கூட அன்புமணியின் அனுமதியைப் பெற்று மும்பை போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 மாவட்டச் செயலாளர்களும் அன்புமணியின் பக்கம் இருப்பதால் இந்த 6 மாவட்டங்களைச் சேர்ந்த பாமக முழுமையாக டாக்டர் அன்புமணியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பரபரப்பு பேட்டி அளித்தார். அதில் தனது மகனும், பாமக தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறித்து சரமாரியான புகார்களைத் தெரிவித்தார், குற்றம் சாட்டினார், சாடினார் மற்றும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார்கள் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், மாவட்ட நிர்வாகிகளை அவர் இன்று முதல் சந்திக்கவுள்ளார். 3 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
முதல் கட்டமாக இன்று 6 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளை இன்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதேபோல அடுத்த 2 நாட்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அவர் முடிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட 6 மாவட்டங்களுக்குட்பட்ட 23 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 22 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். ஒருவர் மட்டும் டாக்டர் அன்புமணியின் அனுமதியுடன் மும்பை போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 மாவட்டங்களும் டாக்டர் அன்புமணியின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது.