அன்னை தமிழ்தான் உலகின் மூத்த மொழி.. சர்ச்சை பண்ணாதீங்க.. கமல்ஹாசனுக்கு டாக்டர் அன்புமணி ஆதரவு!
சென்னை: அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி. நடிகர் கமல்ஹாசன் தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்று கூறியதற்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தேவையற்றது. சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தக்லைப் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரை வரவேற்று கமல்ஹாசன் பேசும்போது அவரையும் ஒரு தமிழராகவே பார்ப்பதாக கூறினார். அதைக் குறிக்கும் வகையில் தமிழிலிருந்துதான் கன்னடமும் தோன்றியது என்று குறிப்பிட்டார். அதாவது கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்களே என்று குறிக்கும் வகையில் பேசியிருந்தார் கமல்ஹாசன். ஆனால் தற்போது கமலுக்கு எதிராக கர்நாடகத்தில் சிலர் பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.
இதற்கு தமிழ்நாட்டில் கண்டனம் எழுந்துள்ளது. கமல்ஹாசனுக்கு ஆதரவாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்து தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது.
கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.