மகளுடன் சென்று அப்பா ராமதாசை சந்தித்த அன்புமணி.. 45 minutes.. தைலாபுரத்தில் நடந்தது என்ன?
சென்னை: பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது மகளுடன் சென்று பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து விட்டு வந்துள்ளது தமிழக அரசியலையே பரபரப்பாக்கி உள்ளது. தைலாபுரம் இல்லத்தில் நடந்தது என்ன? அப்பா-மகன் சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது தான் அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாமக.,வில் கடந்த சில மாதங்களாக ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் அன்புமணி பற்றி மிக கடுமையான விமர்சனங்களை மிகவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார் ராமதாஸ். பாஜக.,வுடன் கூட்டணி வைப்பதை ராமதாஸ் விரும்பவில்லை என்பதும், அவரது விருப்பம் அதிமுக உடனான கூட்டணி தான் என்பது தெளிவாக தெரிந்தது. அன்புமணி ராமதாஸ் கொடுத்த அழுத்தம் காரணமாக தான் வேறு வழி இல்லாமல் கடந்த தேர்தலில் பாஜக., உடன் கூட்டணி வைத்ததாக அவரே ஓப்பனாக பேசினார்.
இதைத் தொடர்ந்து அடுத்த நாளே தனது செல்வாக்கை அப்பாவிற்கு காட்டும் விதமாக மாவட்ட தலைவர்களையும், தொண்டர்களையும் வரவழைத்து 3 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதே சமயம் அன்புமணிக்கு ஆதரவானவர்களை கட்சி பதவிகளில் இருந்து நீக்கி விட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார். ஆனால் ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகள், அன்புமணியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் இருவர் இடையே மாறி மாறி பிரச்சனை இருந்து வந்தது. இதனால் இது குடும்ப பிரச்சனையா அல்லது உட்கட்சி பிரச்சனையா என்பது தெரியாமல் கட்சி நிர்வாகிகளே குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் முக்கிய திருப்பமாக இன்று காலை தைலாபுரம் இல்லத்திற்கு தனது மகளுடன், பாமக நிறுவனம் ராமதாசை சந்திக்க அன்புமணி ராமதாஸ் சென்றிருந்தார். ஆனால் அப்பா-மகன் சந்திப்பு நடந்ததா? இதில் என்ன பேசப்பட்டது என தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் இரு தரப்புக்கும் இடையே சமரசம் பேசப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆடிட்டர் குருமூர்த்தி வருகை
அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் இருந்து சென்ற சிறிது நேரத்திலேயே ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாசை சந்திக்க சென்றுள்ளனர். ஆடிட்டர் குருமூர்த்தி, ராமதாசை சந்திக்க சென்றுள்ளதால் பாமக விவகாரத்தில் பாஜக தலையீடு வருவதாக கருதப்படுகிறது. ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக மறைமுகமாக இறங்கி உள்ளதும் தெளிவாகி உள்ளது.
ராமதாஸைப் அதிமுக கூட்டணியை விரும்புகிறார். பாஜக கூட்டணியை விரும்பவில்லை. ஆனால் இந்த முறை அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதால் திமுக கூட்டணிக்கு செல்லலாமா என ராமதாஸ் யோசித்து வருவுதாக சொல்லப்படுகிறது. இதுதான் அன்புமணியையும், பாஜகவையும் டென்ஷனாக்கி விட்டதாக சொல்கிறார்கள்.
சமீபத்தில் பேசிய ராமதாஸ், "அன்பு தம்பி ஸ்டாலின்" குறிப்பிட்டுள்ளதால் அவர் இந்த முறை திமுக கூட்டணிக்கு செல்ல அவர் முனைப்பு காட்டுவதாக உணரப்படுகிறது. அதனால் தான் அவரை சமாதானப்படுத்தி தங்கள் பக்கமே வைத்துக் கொள்வதற்காக தான் ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் ராமதாசை சந்திக்க சென்றுள்ளனர் என சொல்லப்படுகிறது.
2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த ஜூன் 08ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். அதற்கு முன்பாக பாமக.,வில் இருக்கும் உட்கட்சி பிரச்சனையை தீர்க்க முடிவு செய்தும், பாஜக கூட்டணியில்தான் பாமகவும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்தான் குருமூர்த்தியை ராமதாசை சந்திக்க அனுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.