விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா?... அன்புமணி ராமதாஸ்!

Meenakshi
May 26, 2025,06:28 PM IST

சென்னை:  திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து  டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், சென்னையை அடுத்த  திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலை சீரழித்து, அதில் 8.48 ஏக்கர் பரப்பளவில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த  திருவேற்காடு நகராட்சி தீர்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தும் கூட  இதை செயல்படுத்துவதில்  நகராட்சி நிர்வாகம் பிடிவாதம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.


விளையாட்டுத் திடலுக்கு அருகில் 169 ஏக்கர் பரப்பளவுள்ள கோலடி ஏரி அமைந்துள்ளது. திருவேற்காடு நகரத்தின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி தான் திகழ்கிறது. இந்த ஏரிக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் ஏரி மாசு படுவதுடன், நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்படும்.  அங்குள்ள பள்ளிகள், மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கான தொகுப்பு சமையல் கூடம், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். திருவேற்காடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகில், கூவம் நதிக்கரையோரம்  உள்ள அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர்  நிலத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம். ஆனால், ஊருக்கு நடுவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க நகராட்சி துடிப்பது ஏன்?




ஒருபுறம் தொகுதிக்கு ஓர் விளையாட்டுத் திடல் என்று அறிவித்து அதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, இன்னொருபுறம் விளையாட்டுத் திடல்கள் அழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்ப்பது நகைமுரண். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு,  கோலடி விளையாட்டுத் திடலில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை  தடுத்து நிறுத்த  வேண்டும்; அங்குள்ள விளையாட்டுத்திடலை கூடுதல் வசதிகளுடன்  மேம்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.