நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
சென்னை: நான் ஒன்றும் பிடிவாதக்காரன் கிடையாது, பதவி மீது ஆசை எதுவும் இல்லை என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் இருவரும் தத்தமது அரசியல் பணிகளை செய்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் கட்சியின் பொதுக்குழுவை இன்று (சனிக்கிழமை) கூட்டுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரிடமும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனித்தனியாக விசாரணை நடத்திய நிலையில், அன்புமணியின் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் ராமதாஸ் தரப்பு மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டு தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசுகையில், என் மீது நம்பிக்கை வைத்து ஓராண்டு காலம் பொறுப்பில் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி.என் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.ராமதாசால் தற்போது பாமகவை நிர்வகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சில செய்திகளை வெளியே சொல்ல முடியாது.
பாமகவில் நிரந்தர தலைவர் கிடையாது. நிறுவனர் மட்டுமே என்றும் நிரந்தரமானவர். நம்முடைய குலதெய்வம் வழிகாட்டி ராமதாஸ் தான். அவர் உள்ளத்தில் இருக்கிறார். ராமதாஸ் ஒரு தேசிய தலைவர், 6 இடஒதுக்கீடுகளை பெற்று தந்தவர். நான் ஒன்றும் பிடிவாதக்காரன் கிடையாது, பதவி மீது ஆசை எதுவும் இல்ல. எவ்வளவோ வலிகளை தாங்கிக் கொண்டிருக்கிறேன், தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம். தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டணி அமையும். மெகா கூட்டணி அமைப்போம். உங்கள் விருப்பப்படி கூட்டணி அமையும். மெகா கூட்டணி அமைப்போம், வெற்றி பெறுவோம், ஆட்சி அமைப்போம் தேர்தலில் நமக்கு 30-40 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலே நம்முடைய ஆட்சிதான் என்று தெரிவித்துள்ளார்.