என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

Su.tha Arivalagan
Jul 11, 2025,05:10 PM IST
விருத்தாச்சலம்: எனது வீட்டில், நான் அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை யாரோ வைத்துள்ளனர். அதை வைத்தது யார், யாருக்காக ஒட்டுக் கேட்டார்கள் என்பதை விசாரித்து வருகிறோம். சீக்கிரமே அதைக் கண்டுபிடிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.



பாமகவுக்குள் நிலவி வரும் குழப்பங்களும், சண்டையும் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் புதுப் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் தனது வீட்டிலேயே தன்னை ஒட்டுக் கேட்புக் கருவி வைத்து ஒட்டுக் கேட்டதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

விருத்தாச்சலம் வந்திருந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதை வைத்தது யார், எதற்காக வைத்தார்கள், வைக்கச் சொன்னது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

டாக்டர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில்தான் தலைவர்களை, கட்சியினரை சந்திப்பது வழக்கம். அந்த இடத்தில்தான் ஒட்டுக் கேட்புக் கருவி வைக்கப்பட்டதாக தற்போது அவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.