தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
சென்னை: உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறதென்றால் அது என் விஷயத்தில் நடந்திருக்கிறது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே பல நாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் மாறி மாறி கூறி வருகின்றனர். அத்துடன் நின்றுவிடாமல், கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் போட்டி போட்டு கூட்டத்தையும் நடத்தி வருகிறார்கள். இவர்களின் மோதல் போக்கு விரைவில் சரியாகி விடும் என்றிருந்த நிலையில், தற்போது இவர்களின் மோதல் போக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலூரில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில், என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளார். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார். இது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ராமதாஸ் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், எனது தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி வைத்தது அன்புமணி தான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி ராமதாஸ் தான். அன்புமணி ஒவ்வொருவரிடமும் ஒரு பொய்யைக் கூறி வருகிறார். செயல் தலைவரான அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு எதிரானது. சட்ட விரோதமானது. பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்க வேண்டும். நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறும் யாரும் உரிமை கோர முடியாது. பாமக நான் உருவாக்கி கட்சி; நான் தான் நிறுவனர் என்று தெரிவித்துள்ளார்.