பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

Su.tha Arivalagan
May 30, 2025,05:57 PM IST

சென்னை: பாமக பொருளார் பதவியிலிருந்து திலகபாமா நீக்கப்பட்டுள்ளார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதால் இந்த நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் எடுத்துள்ளார். ஆனால் திலகபாமா பதவியில் தொடர்வார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளதால் மோதல் மேலும் உஷ்ணமடைந்துள்ளது.


பாமகவில் அதிகாரப் போட்டி உச்சத்தை எட்டியுள்ளது.  டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறித்து நேற்று தைலாபுரம் தோட்டத்தில் சரமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பேசியிருந்தார் டாக்டர் ராமதாஸ்.


இதையடுத்து மாவட்டச் செயலாளர்களுடன் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆலோசனையில் இறங்கியுள்ளார் அன்புமணி ராமதாஸ். இந்த கூட்டத்தில் பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள், 22 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




இந்த நிலையில் மறுபக்கம் தைலாபுரம் தோட்டத்திலிருந்து அதிரடியான நடவடிக்கை ஒன்று வந்துள்ளது. அதன்படி கட்சி பொருளாளர் பதவியிலிருந்து திலகபாமாவை நீக்கி கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தலைவர் என்ற பொறுப்பையும் அவரே எடுத்துக் கொண்டு அந்த அறிக்கையில் புதிய பொருளாளர் நியமனத்தையும் அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.


அதன்படி திருப்பூரைச் சேர்ந்த சையத் மன்சூர் உசேன் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்தப் பொறுப்பில் இரு்நதவர்தான். இந்த நிலையில் தற்போது திலகபாமா தனது பொருளாளர் பதவியில் தொடருவார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் மோதல் மேலும் வலுத்துள்ளது.


கட்சி பொருளாளர் பதவியில் மாற்றம் செய்துள்ள டாக்டர் ராமதாஸ், அடுத்தடுத்து என்னென்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.