முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரம் கேட்டிருப்பதாக வெளியான தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த 2 நாட்களாகவே தமிழக அரசியல் களம் பரபரக்க துவங்கி உள்ளது. தலைவர்களின் அடுத்த சந்திப்புகள் எதிர்பாராத டுவிஸ்ட்களையும் ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். வீட்டுக்கும் போய் பேசியுள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதனால் ஓபிஎஸ், திமுக கூட்டணியில் இணைய போகிறார் என மீடியாக்களில் தகவல் பரவியது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஆனால், மருத்துவமனையில் இருந்து திரும்பி உள்ள முதல்வரை சந்தித்து நலம் விசாரிக்கவே சென்றேன். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். தேர்தல் நெருங்கும் போது தன்னுடைய முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் ஓபிஎஸ். தனது மகன் ரவீந்திரநாத்துடன் ஓபிஎஸ் சென்றதும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து ஓபிஎஸ்.,ஐ அழைத்துச் சென்றதும் முக்கியமானதாக பேசப்பட்டது.
ஒரு பக்கம் ஓபிஎஸ் வந்து முதல்வரை சந்தித்து விட்டு சென்றுள்ளார் என்றால் மற்றொரு பக்கம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் நேரடியாக சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்துள்ளார். ஒருவேளை தேமுதிக.,வும் திமுக கூட்டணியில் இணைய போகிறதா என அனைவரும் கேட்க துவங்கியதும், ஜனவரியில் நடக்கும் மாநாட்டிற்கு பிறகு தான் தன்னுடைய கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளதாக கூறி விட்டார் பிரேமலதா விஜயகாந்த்.
இப்படி பாஜக-அதிமுக கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்களாக முதல்வரை நேரில் சென்று சந்தித்து வருவதால் அடுத்ததாக பாமக தலைவர் டாக்டர் ராமதாசும் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் பரவியது. ஏற்கனவே பாமக.,வில் உட்கட்சி பிரச்சனைகள் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்த தகவல் இன்னும் பரபரப்பை கிளப்பியது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேட்டதற்கு, முதல்வரை சந்திக்க நான் நேரம் எதுவும் கேட்கவில்லை என உறுதியாக மறுத்து விட்டார். இதனால் பரபரப்பு சற்று அடங்கியுள்ளது.