என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

Meenakshi
Jun 13, 2025,02:49 PM IST

சென்னை: என் மூச்சுக் காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு பாமக தலைவர் பதவியை வழங்கமாட்டேன். நானே பாமக தலைவராக தொடர்வேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையில் வார்த்தை மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாமக கட்சியை சேர்ந்தவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே சமரசம் பேசி வந்த நிலையில், அது டிராவில் முடிந்ததாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் தொடர்ந்து ராமதாஸ் அன்புமணியின் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.


இந்த நிலையில், இன்று மீண்டும் தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாமல்லபுரம் மாநாட்டின் போதும், மாநாட்டிற்கு பிறகும் நடப்பதை பார்க்கும் போதும் மிகவும் வருத்தமாக உள்ளது. கடைசி வரை பாமகவின் தலைவர் பதவியில் நான் இருக்க வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கும் , பொறுப்புக்கும் வரக் கூடாது என்று கட்சி தொடங்கும் போது கூறினேன். தற்போது அதனை காப்பற்ற முடியவில்லை. விருது வாங்கினால் மட்டும் போதாது. பெற்றோரிடமும் விருது பெற வேண்டும்.




யார் ஆரம்பித்த கட்சி இது? 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறிவிட்டு, மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார்.  அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மனஉளைச்சலை உண்டாக்குகிறார் அன்புமணி. தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராத அளவுக்கு படுத்துகிறார். 2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்து விடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும் போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன். அன்புமணி மீது இருந்த பாசம் எல்லாம் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.


பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார். மாநாட்டிற்கு பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மோசமாகி விட்டது. 2026 தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்குத் தலைவர் பதவியை தருகிறேன் என் நேற்று சொன்னதற்கு 99 சதவீத பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த 1 சதவீதம் அன்புமணியின் குடும்பத்திற்காக விட்டுவிடுகிறேன்.