அருளாட்சி புரியும் அன்னை மீனாட்சி!
- டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோடு
பகலவனைத் தேடி மலரும் பூக்களுக்கு நடுவே
பூத்தாயே அன்னை மீனாட்சி
மதுரை மாநகரின் நான்கு திசை கோபுர நடுவில்
வீற்றிருக்கும் நாயகியே
மங்களமாய் சொக்கநாதர் உடனுறைய
மகிழ்விலே பூத்திருக்கும் தாமரையே
பச்சை பட்டு உடுத்தி பச்சைக்கிளி தனை ஏந்தி
செம்பவள வாய் கொண்டு சிரிக்கும் முகம் தான் கொண்டு
மாணிக்க மூக்குத்தி மஞ்சள் நிற முகத்திலே மின்ன
மல்லிகை மலர்கள் உன் சிரத்தை அலங்கரிக்க
மின்னுகின்ற ஒட்டியாணம் சின்ன இடை தாங்கி நிற்க
கனத்த தண்டையோ கால்களில் அழகுடன் கொஞ்சிட
தங்கத்தாமரை வட்டமிடும் பொற்றாமரைக் குளமும் அழகு
தங்க தாரகையே வெள்ளி ஊஞ்சலில் சொக்கருடன் ஆடும் ஆட்டமும் அழகு
மதுரை மாநகரின் அரசியும் நீயே
மக்களைக் காக்கும் அற்புத அன்னையும் நீயே
மல்லிகை மலர் குவியலுக்குள் நீ மயங்கி நிற்க
மனம் எல்லாம் மகிழ்வோடு நாங்கள் வணங்கி நிற்க
அருளாசி புரிவாய் அன்னை மீனாட்சி
அனைத்தும் தருவாய் தாயே மீனாட்சி