Dr S Manimegalai Poem: உழைப்பின் பெருமை நமக்கே அருமை!
May 01, 2026,03:33 PM IST
- டாக்டர் எஸ். மணிமேகலை
உழைப்பினைக் கூட்டு உயர்வினை காட்டு
உழைப்பால் உயர்ந்திடு உயர்வினை தந்திடு
சுறுசுறுப்பாய் செயல்படும் எறும்பிற்கு உழைக்க கற்றுத் தந்தது யார்
சிறகை விரித்து பறந்து பறந்து கூடுகட்டும் பறவைக்கு உழைப்பினை கற்றுத் தந்தது யார்
சிலை வடிக்கும் சிற்பிக்கு உழைப்பு அவனது சிறிய பணியும் செதுக்கிய உளியும்
சிற்பமாய் வடிவெடுத்து வந்தபின் அதில் தெரியும் அவன் சிந்திய வியர்வையும் சீரிய உழைப்பும்..
கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகள் காலை வருடி செல்கிறது அசராமல்
கல்வி கற்கும் மாணவச் சமுதாயம் முன்னேறுகிறது தத்தம் உழைப்பில் ஆரவாரம் இல்லாமல்
கல்வி கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
ஆனால் கருணையோடு உழைப்பவர்க்கோ காணும் இடமெல்லாம் சிறப்பு
பெண்ணே உனக்குள் எத்தனை வலிகள் எத்தனை வேலிகள்
எத்தனை உணர்வுகள் எத்தனை தடைகள்? போதும் வெளியே வா
பெண்ணே தடைகளை தகர்த்தெறிந்து உழைப்பை உரமாக்கி
வெற்றி நடை போட வேகமாய் வெளியே வா
உழைப்பை என்றும் விதைத்திடுவோம்
உயர்வை அறுவடை ஆக்கிடுவோம்.
உழைப்பால் உயர்ந்திடுவோம்
உயர்வை உடைமை ஆக்கிடுவோம்
உழைப்பின் பெருமை முதலில் உனக்கே அருமை
உழைப்பின் அருமை முடிவில் உனக்கே பெருமை
(கவிதாயினி DR.மணிமேகலை. S., ஈரோடு)