மயக்கும் மயிலே.. மயங்கும் மனமே!

Su.tha Arivalagan
Jul 30, 2026,02:52 PM IST

- கவிதாயினி DR.S.மணிமேகலை, ஈரோடு


மயிலே அன்று சோலைகளில் சுற்றி திரிந்தாய்...

மயிலே இன்று மனைகள் நோக்கி வந்திட்டாய்....


கம்பு அரிசி தூவி விட்டேன் அழகாய் கொத்துகின்றாய்

கம்பீர மிடுக்குடன் அழகிய நடைபயிலுகின்றாய்


அகவி அகவி அழைக்கின்றாய் ஆண் மயிலே..

தேடித்தேடி தோகை விரிக்கின்றாய் ஆண் மயிலே


பெண் மயிலை தேடி இங்கு நீயும் வந்தாயோ

பெண் மணம் நுகரத் தோகை விரித்தாயோ




மயிலே உன் உடலும் மனமும் குளிர்ந்ததா

மயிலே உன் அகமும் புறமும் நிறைந்ததா


மயிலே நித்தம் நீ வருவாயா காத்திருப்பேன்

மனம் மயக்கிட வருவாயா மகிழ்ந்திருப்பேன்