Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
- முனைவர் தி. தங்கலட்சுமி
மண்ணின் அடியாழத்தில் பல்லூழிக்காலமாய்
புதையுண்டு கிடந்தேன்....!
பெருவாழ்வு வாழ்ந்து மரித்துப்போன
பெருமரமாகிய நான்!
செழுமையிழந்து வளப்பம் குன்றி...
பட்டமரமாய் நிற்கத் திராணியற்று நிர்கதியாய்
மண்ணில் சாய்ந்த பெருமரம் நான்...!
காலச்சுழலில் சிக்கி, வீசிய பெருஞ்சூறாவளியில்
மண் மீது கண் மூடி மண் மூடி மண் மூடி
மண்ணடுக்கின் அடுத்தடுத்த தளம் தாண்டி
மறைந்தே போனேன்...!
மனிதர்களும் மறந்தே போயினர்!
காலம் மறவாது விரைந்தோடியது!
பக்குவப்பட பகுத்தறியப் பெற
பாங்கான கைகளால் பட்டை தீட்டப்பெற
கண்மூடி மண்ணடுக்கின் இடையில் தவமாய்ப்
புதையுண்டு காத்திருந்தேன்... பல்லூழிக்காலமாய்...!
சூறாவளி வேகத்தில் சுரங்கப்பணிகள் வந்தடைந்தன
வாழ்ந்து மறைந்த, மறந்து போகப்பட்ட இடத்தில்...
மீண்டும் புதுவாழ்வாய் மண்ணின் மேலடுக்கைக் காண
எனதருமை தெரிந்த கரங்களில் அகப்பட்டேன் நான்!
அற்புதக்கரங்களோ...
இது கண்ணைப்பறிக்கும் அரியதோர் வைரமெனக்
கையிலெடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டது!
ஆனால் அருகிருந்த மண்சூழ்ந்த நிலமோ...
இது வெறும் நிலக்கரியென ஏளனமாய்ச் சிரித்தது!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).