மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

Su.tha Arivalagan
Aug 10, 2026,11:21 AM IST

சென்னை: மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் எந்த சுற்றறிக்கையும் பிறப்பிக்கவே இல்லை என்று முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவு:


சட்டமன்றத்தில் பேசிய இடது கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒரு புரிதல் இல்லாமல் மத்திய அரசு இதில் தலையிட முடியாது என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் தாயை பெருமை சேர்க்கும் இடத்தில் கூட மத்திய அரசின் மீது உள்ள வன்மத்தை உமிழ்ந்தார் என்பது தான் எனது கருத்து.


ஏனென்றால் மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து வந்த சுற்றறிக்கை அந்தந்த மாநில பாடல் மூன்றாவது பாடப்பட வேண்டும் என்று எங்கேயுமே குறிப்பிடப்படவில்லை. அந்த சுற்றறிக்கை என்ன சொல்கிறது என்றால் புதிதாக இப்பொழுது வந்தே மாதரம் பாடல் சேர்க்கப்படுவதால் வந்தே மாதரம் பாடல் தேசிய கீதத்திற்கு முன்னால் பாடப்பட வேண்டும் அது முழுவதுமாக பாடப்பட வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது.


அதனால் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதல் இடம் அளிக்கப்படுவது நம் எல்லோருக்கும் பெருமைதான். ஆனால் இங்கே சிலர் ஏதோ உள் துறை அமைச்சகம் மாநில பாடலை மூன்றாவதாக பாட வேண்டும் என்று வலியுறுத்துவதாக பேசுவது சரியல்ல.




இன்று திருக்குறள் நமக்கு பெருமை சேர்க்கிறது என்று தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் இன்று தான் சொல்கிறார். ஆனால் திருக்குறளை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர் நம் பாரத பிரதமர் என்பதை நான் பெருமையோடு இங்கே நினைவு கூறுகிறேன்.


அதுமட்டுமல்ல புதிய கல்விக் கொள்கையில் கூட மாநில மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதுவுமே இங்கே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை தான் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.