Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
- முனைவர் தி.தங்கலட்சுமி
தாளாத இருட்டில்
தொலையாத அமைதியில்
யாருமற்ற தனிமையில்
அச்சுறுத்தும் திகில் நிமிடத்தில்
உறைந்து போகும் நெஞ்சமாய்
கரைந்து சென்றது
நம் பல்லாண்டுப் பிரிவு
பிரிவின் பின்
நிகழ்ந்த மீள் சந்திப்பு!
சந்திப்பு கணங்கள்
கணங்கள் யுகங்களாய்
நீள்கிறது...
நீள்கிறது
என் இமையோர
கரிப்புக் கோடுகள்
நாம் பழகிய நாட்களின்
அழகிய பழங்கதை பேசி...
பேசிப் பழகிய இதழ்கள்
வார்த்தைகளற்று
வாயடைத்துப் போக
பாதை மாற்றிப்
போகச் செய்த விதி!
விதி விலகி நின்று
வீதியோரம் வேடிக்கை
பார்க்கும் வாடிக்கை
காலத்தின் கோலம்!
கோலம் கண்டு
உள்ளம் உருகி
நிறைந்து வழிந்தோடும்
இதுவே வாழ்வின்
எதார்த்தமென
உறைந்திட்ட
இதயத்திற்கு
உரைத்திட
மௌனத்தில் துடித்திட
துடிப்புநிலை மாறி
அமைதியில் நின்றிட
சூழல் மறைந்து
நிறைவுற்றது நிமிடம்!
நழுவிச் சென்றன
நினைவலைகள் எங்கோ...
மீண்டுமோர்
கரைந்திடும் நிமிடங்கள்
நகர்கின்றன
நில்லாது ஓடும்
காலத்தின் கால்கள்
காலடியில்
கடந்து செல்கின்றன
நினைவுகளின் நிஜங்களும்
நிஜங்களின் நினைவுகளும்
நிம்மதி நிழல் தேடி
பிரிகின்றன...
மீண்டும் பாதைகள்
நிகழ்கின்றன
மீள் சந்திப்புகள்
எப்போதும் போல
(மௌனத்திலேயே...)
மௌனமாகவே
நேர்க்கோட்டுப்
பாதைகளற்ற
உலகத்தில்...
முச்சந்திகளும்
நாற்சந்திகளும்
நிறையுலகில்
தாளாத இருட்டில்
தள்ளாத வயதில்...!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).