தாயன்பு !
டாக்டர் தி. தங்கலட்சுமி
அன்பில் உயர்வு தாழ்வு என்பதில்லை
ஆனபோதிலும் தாயன்புக்கு வேறேதும் ஈடில்லை!
கண்ணில் காணும் முன்னமே
உயிரில் உணர்வில் கலந்த
அன்பெனும் உணர்வே!
தன் ஊனுள் உயிர் விதைத்து
உதிரம் பாய்ச்சி
கருவில் ஊன் வளர்த்து
உயிர் கொடுத்த தாயே,
நீயுமோர் பிரம்மனே!
உலகில் உன் அன்பிற்கு
ஈடு இணை ஏது?
உறவையும் உலகையும்
அடையாளம் காட்டி
ஞானம் புகட்டிய ஞாலமே!
அந்த உறவையும் உலகையும் மறந்து
என்னையே உனது உலகென மாற்றி
மகிழ்ந்து வாழ்ந்திடும்
நீயுமோர் மழலையே!
பாரபட்சமென்பது கிடையாது;
ஆகையால்,
நீயுமோர் நியாயத் தராசே!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).