சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
Aug 15, 2026,05:31 PM IST
- முனைவர் தி தங்கலட்சுமி
சுதந்திர தாகம் தணிந்து...
சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ?!
அந்நியர் தந்திரத்தில் மயங்கி
சுதந்திரமிழந்து அடிமைப்பட்டது
அன்னைபூமி!
வணிகம் செய்ய வந்தே
வாரிச் சுருட்டிய வளமோடு
வாகாய்ப் பூட்டி விலங்கிட்டார்
வெளிநாட்டார்!
அடிமைப்பட்ட நிலைகூட அறியா
அறியாமைக் காரிருளில் மூழ்கிக்
கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள்
பலவும் கைக்கொண்டே...
பாமரமாய் வாழ்ந்த மக்கள் பல்லோர்!
அந்நிய நிலமடைந்தே கல்விகற்று,
அவர்தந்த பட்டம் கொண்டே...
தாயகம் மீட்டனர் தலைவர்கள்!
அறிவின் சுடராலே அறியாமை நீக்கி
அகிலமெலாம் அன்பெனும் அற்புதச் சுடரேற்றி
அறவழிப் போராட்டமெனும் அரிய வழியிலே
புதிய அரசியல் சாசனம் நாட்டி
அந்நியர் மனங்களில் அச்சமூட்டி
நாட்டு விடுதலைக்கு வழிகாட்டி
தியாகத்தின் திசைகாட்டியாய்த் திகழ்ந்து
தேசப் பிதாவாக உயர்ந்தார் அண்ணல் காந்தி!
அரை ஆடைப் பக்கிரி என
பரிகசிக்கப்பட்டார் அண்ணல்!
இன்னல் பல கடந்தே
நாடு பெற்றது சுதந்திரம்!
கனல் காக்கும் வரிகளால்
அக்னிக் குஞ்சை
எல்லோருள்ளும் நிறைத்து...
சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய
மகாகவியின் தாக்கத்தால்
வெந்து தணிந்தது சுதந்திர தாகமும்!!
பல்லோரின் உயிர்த் தியாகத்தால்
பூத்தது விடுதலை எனும் மலர்!
அந்நியர் சென்றடைந்தனர் தந்தேசம்!
ஆனால், விட்டுச் சென்றனர்
மும்மை நூற்றாண்டின் எச்சமாய்...
ஆங்கில மொழி மோகத்தை...
அந்நிய கலாச்சார வாழ்வியலை...
நடை உடை பாவனையை...
வெம்மை நிறை வானிலை கொண்ட
தமிழகத்தில் கோட்டும் சூட்டும்
காலுறையும் பாதம் புதை காலணியும்
சீருடையில் சிறைபடும் சிறார்கள்!
நுனி நாவில் ஆங்கிலம் சரளச் சதிராட..
'ஐ டோன்ட் நோ டமில்' என்றே
தாய்மொழிப் புறக்கணிப்பில்
புளகாங்கிதம் மேலோங்க...!
பெண்ணுரிமை பெண் சுதந்திரம் என
பெரும் பெரும் படிப்புகளும்
பட்டங்களும் பதவிகளும்
வனிதையரை அலங்கரிக்க...
அவர்தம் ஆடையணிமணிகளோ
அரைகுறையென மாறியது...
அரைநில்லாது போன ஆடைகளால்...
அரை ஆடைப் பக்கிரி
அண்ணலுக்கு நிகராய்
பிரமாண்ட விலை கொடுத்து
அணிந்திடும் புத்தாடையில்
ஆயிரம் பொத்தல்கள்!
கேட்டால்... ஆடை உடுத்துவது
அவரவர் சுதந்திரம்!
தழையத் தழைய புடவை கட்டித்
தலைகொள்ளாது பூச்சூடி
நெற்றி நிறை திலகமிட்ட
மங்கையர் குலமெல்லாம்
விரைந்தோடி மறைந்தே போயினர்!
தலைவிரி கோலமாய்
தமிழர் பண்பாட்டின்
தலைகுனிவுச் சின்னமாய்
மரபு மறந்த மங்கையரே இன்று ஏராளம்!
கள்ளுக்கும் போதைக்கும் அடிமையானால்
படிப்பறிவற்ற ஏழைக்கூலிச் சாமானியன்..!
அதிகம் கற்றவரின் கூட்டம்
போடும் மது விருந்துக் கூட்டங்கள்
நள்ளிரவுக் கொட்டங்கள்!
சுதந்திர மோகத்தின் சிறுதுளியே
இங்கு பகன்றது!
சுதந்திர தாகம் தணிந்து...
சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
இந்த நிலை என்று மாறுமோ??!!
இதற்கு விடைபகர்வார் யாரோ!!??
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).