பரபரப்பைக் கிளப்பும் போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது!

Meenakshi
Jun 26, 2025,06:51 PM IST

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.


அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியான பிரஷாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதை பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணாவிடம் சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.  பிரசாந்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.




இந்த விசாரணை போது நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்களுடன் கோட் வேர்ட்ஸில் பேசியிருப்பதும் தெரிய வந்தது. விசாரணையின் முடிவில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் வழங்குவதற்கு நடிகர் கிருஷ்ணா தனது கார் ஓட்டுனரின் செல் போனை பயன்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.


நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் மேலும், பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.