திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

Su.tha Arivalagan
Sep 07, 2026,03:14 PM IST

சென்னை : முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான கே.என். நேரு மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கின் விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் சமீபத்தில் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது எஃப்ஐஆர்., பதிவு செய்யப்பட்டு, அதன் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


வழக்கின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்:




முந்தைய திமுக ஆட்சியின் போது அரசு ஒப்பந்தப் பணிகளை வழங்குவதிலும், திட்டங்களுக்கான ஒப்புதல்களை அளிப்பதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தற்போது முறைப்படியான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


10% 'கட்சி நிதி' வசூல்: அரசு ஒப்பந்தக்காரர்களிடம் (Contractors) பணிகளை ஒதுக்குவதற்காகவும், நிலுவையில் உள்ள தொகையை விடுவிப்பதற்காகவும் மதிப்பீட்டுத் தொகையில் 10% வரை "கட்சி நிதி" என்ற பெயரில் லஞ்சமாகப் பெறப்பட்டதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எஃப்ஐ ஆரில்  கே.என். நேரு உட்பட 13 பேர் பெயர் விவரங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, அடையாளம் தெரியாத சில அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள், தனியார்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


சட்டப் பிரிவுகள் மற்றும் விசாரணை கட்டம்:


ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) கீழ், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், லஞ்சம் பெறுதல் மற்றும் குற்றச் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய முக்கியப் பிரிவுகளின் கீழ் இந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எஃப்.ஐ.ஆர் வெளியீட்டைத் தொடர்ந்து, வழக்கிற்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடுத்தகட்ட சோதனைகளை நடத்தவும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


அரசியல் அரங்கில் பரபரப்பு:


திமுக.,வின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததுடன், அதன் விபரங்களை வெளியிட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளையில், சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற விசாரணை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளின் போதே இதன் முழு பின்னணியும் வெளிச்சத்திற்கு வரும்.