இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் கூறி, முதலமைச்சர் விஜய்யை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களையும், கண்டனங்களையும் முன் வைத்துள்ளார்.
சென்னையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ், "போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டால் கொலைதான் இந்த ஆட்சியில் பதிலா? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?" என முதலமைச்சரை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசின் நிர்வாகக் குறைபாடுகளைச் சாடியுள்ள அவர், "ஆட்சி நடத்துவது எப்படி என்று நீங்கள் 6 மாத கால 'கிராஷ் கோர்ஸ்' (Crash Course) படித்து முடிப்பதற்குள், இங்கே பொதுமக்கள் மடிந்து கொண்டே இருக்க வேண்டுமா? நாட்டின் அவலநிலையை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் சமீபகாலமாகப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள இபிஎஸ், "கடந்த 3 வாரங்களில் தவெக நிர்வாகிகள் எத்தனை பேர் குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள்? ஒரு கட்சியின் தலைவராக, தன் சொந்தக் கட்சியினரையே அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி மாநிலத்தின் காவல்துறையைத் திறம்பட நிர்வகிப்பார்?" என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
மாற்றம் அதிகாரிகளிடம் அல்ல, ஆட்சியாளரிடம் வர வேண்டும்!
புதிய அதிகாரிகள் நியமனம் குறித்துப் பேசிய இபிஎஸ், முதலமைச்சர் புதிய அதிகாரிகளை நியமித்துவிட்டால் மட்டும் போதாது என்று கூறியுள்ளார். "இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சிகளிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது அதிகாரிகளை மாற்றுவதில் இல்லை, ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆட்சியாளரிடம் தான் வர வேண்டும்" என முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் நிர்வாகப் பாடம் எடுத்துள்ளார்.
சிங்கப்பெண் அதிரப்படை அடுத்த வாரம் துவக்கி வைக்க போகிறாராம். கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த போது எதற்காக கடைசி நிமிடத்தில் விழாவை ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளரின் இல்ல விழாவை நீங்கள் சிறப்பிக்க செல்வதற்காக தமிழக பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கி வைக்கும் வரை பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா? என்றும் இபிஎஸ் மிக காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.