எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

Manjula Devi
Apr 22, 2025,06:41 PM IST

சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரும் தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 


தமிழக அரசியல் வரலாற்றில் பாஜக- அதிமுக பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் மீண்டும் கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணி குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். அதற்கு பதிலடி கொடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பேசி வருகிறார். அதே சமயத்தில் சமீபத்தில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.




இந்த நிலையில் தமிழக மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி அறையில் இருவர் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை நடைபெறும் முக்கிய பிரச்சினைகளில் அதிமுக-பாஜக எம்எல்ஏக்கள் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.


தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் மதுவிலக்கு தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மதுவிலக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில், இன்று மதுவிலக்கு தொடர்பான மானிய கோரிக்கைகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் மதுவிலக்கு தொடர்பான கேள்வியை முன்வைக்க இருக்கிறார். இவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் எஸ். பி வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.