ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

Su.tha Arivalagan
Feb 24, 2026,03:39 PM IST

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் அன்றாட குடும்பச் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதில், 


* ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.




* திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வால் பன்மடங்கு அதிகரித்துள்ள மக்களின் அன்றாட குடும்பச் சுமையைக் குறைத்திடும் வகையில், அதிமுக ஆட்சியமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.


* கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.


* மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு உதவித்தொகை ரூ.8000 லிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்


* அதிமுக ஆட்சியமைத்ததும் ப்ளஸ் 2 முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.  மேலும், பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.


* நகரப்பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.