நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

Meenakshi
Jul 16, 2025,03:18 PM IST

சிதம்பரம்:  கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். நான் எடுப்பதுதான் முடிவு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சிதம்பரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக ஆட்சியின் போது விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன். நான் படிக்கும் காலத்தில் இருந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். கஜா புயலில் கடுமையாக சேதம் ஏற்பட்டது. நாங்கள் புயல் வேகத்தில் பணியாற்றினோம். விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்தோம். விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தோம். விவசாயிகளுக்காக அதிமுக அறிவித்த திட்டங்கள் கைவிடப்பட்டன. 


எடப்பாடி பழனிச்சாமி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், நான் பாஜக உடன் கூட்டணி வைத்தவுடன் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. திமுக கூட்டணி வைத்ததால் நல்ல கட்சி. ஆனால், அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி ஆகிவிடுமா?. 




எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொன்னார். கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். நான் எடுப்பதுதான் முடிவு. அதிமுக ஆட்சி அமைக்கும். இதில் இபிஎஸ் முதலமைச்சர். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது. இந்த கூட்டணியில் யாரும் விரிசல் ஏற்படுத்த முடியாது. அதிமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி அடையும் தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். கூட்டணியில் விரிசல் இல்லை. தெளிவா கூட்டணி தான் என்று தெரிவித்துள்ளார்.