இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி.. எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

Meenakshi
Apr 08, 2025,01:48 PM IST

சென்னை: இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி அதன்பிறகு உங்களால் எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது. அகம்பாவித்தில் ஆடுகிறார்கள். காவி உடை அணிந்து வரவில்லை என்று எங்களை விமர்சிக்கிறார். அவருக்கு பேச தகுதி உள்ளதா என்று சட்டசபையில் இருந்து வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சருக்கு தில்லு, திராணி, தெம்பு  இருந்தால் சட்டமன்றத்திலேயே பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்து அதற்குண்டான பதிலை அவையிலே பதிவு செய்தால் நாங்கள் வரவேற்போம். அதனை விடுத்து திட்டமிட்டு அதிமுகவினர்களை வெளியேற்றி விட்டு வேண்டும் என்றே எங்கள் மீது கடுமையான விமர்சனத்தை பதிவு செய்வது எந்த விதத்தில் நியாயம். எங்கள் உரிமையை பறிக்கும் போது அறவழியில் செயல்பட்டு, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.




அதை கிண்டலும் கேலியுமாக பேசுகிறார்கள். நீங்கள் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது எத்தனை முறை வெளி நடப்பு செய்தீர்கள். நாங்கள் அப்போது உங்களை கிண்டலும் கேலியுமா செய்தோம். உங்களை மதித்தோம். இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி அதன்பிறகு உங்களால் எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது. அகம்பாவத்தில் ஆடுகிறார்கள். 


எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வது தான் உங்கள் வேலையே தவிர, மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு உங்களுக்கு நேரமே கிடையாது. காவி உடை அணிந்து வரவில்லை என்று எங்களை விமர்சிக்கிறீர்கள். நீங்கள் பேசலா? முதலமைச்சருக்கு பேச தகுதி உள்ளதா? தான் என்ன செய்தார் என்று முதலில் உணர வேண்டும். தன் முகத்தை முதலில் கண்ணாடியில் பார்க்க வேண்டும். பிறகு தான் அடுத்தவரை பற்றி குறை சொல்ல வேண்டும். தகுதியில்லாத முதலமைச்சர் இன்றைய முதலமைச்சர். எங்களை வைத்துக்கொண்டு பேசியிருந்தால் தக்க பதிலடி கொடுத்திருப்போம். அந்த திராணி உங்களிடம் இல்லை.


இன்றைய முதலமைச்சர் வெண்குடை வேந்தர். நீங்கள் வீரத்தை பற்றி பேசலாமா? ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக வளர வேண்டும். ஆனால் திராவிட கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் வளராது. தேர்தல் வருவதற்கு முன்னர் ஒரு பேச்சு தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு. இரட்டை வேடம் போடுகின்ற கட்சி திமுக கட்சி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.