கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

Meenakshi
Nov 18, 2025,12:26 PM IST

கோவை: கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில்  கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.


தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.  இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.


பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் தற்காலிகமாக ‘ரெட் ஜோன்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.




மாநாடில் பங்கேற்பதற்காக  பிரதமர் நாளை விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன்பின்னர் கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அதன்பின்னர் அங்கிருந்து விமான மூலம் டெல்லி செல்கிறார். 


இதற்கிடையில் கேவை வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பின் போது கூட்டணி விவகாரம் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.